திங்கள், 16 அக்டோபர், 2017

ஒரு விண்ணப்பம் வாங்குறதுக்குள்ள..

இன்று காலை, கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். கணிணியில் மும்முரமாக(!) வேலை செய்து கொண்டிருந்த அம்மணியிடம் போய் வில்லங்க சான்றிதழ் (EC) வாங்குவதற்கான விண்ணப்பம் எங்கு கிடைக்கும் என்று வினவினேன். மிகவும் அலட்சியமாக "கீழே கடையில இருக்கும்பா" என்றார். நமக்கு தெரிந்த பதில்தான் என்றாலும், புதிதாக கேள்விப்படுப்பவதை போல "என்னங்க இது, கவர்மென்ட் ஆபீஸ் விண்ணப்பம் கடையில கிடைக்கும்றீங்க?" ஆச்சரிய தொனியில் கேட்டேன். நம்மை ஒரு முறை ஏற இறங்க பார்த்துவிட்டு, வேண்டா வெறுப்புடன் "காலியாயிட்டு சார்" என்றார்.

வழக்கமாக யாராய் இருந்தாலும் அத்தோடு முடித்துக் கொள்வார்கள் என்ற மமதை அவரது பதிலில் இருந்தது. சரி ஆனது பாத்திரலாம் என்று, சிரித்த முகத்துடன் ஒரே ஒரு 'மந்திரம்' சொன்னேன். உடனடியாக அவர் உடல்மொழியில் அவ்வளவு மாற்றம். பதட்டத்துடன் கூடிய கோபத்தில் "ஹலோ அதெல்லாம் எதுக்கு உங்களுக்கு? என்ன காலைலயே பிரச்சனை பண்ண வந்துருக்கீங்களா" என்று சத்தத்தை உயர்த்தினார். இம்முறை நான் அலட்சியமாக, "நீங்க தான EC பார்ம் இல்லன்னீங்க?" என்றேன். இன்னும் கோபமாக, "இருந்தா தரமாட்டாமோ.." என துவங்கி ஏதோ புலம்பிக்கொண்டே தன்னுடைய மேஜையை துலாவ துவங்கினார்.

அதற்குள் மொத்த அலுவலகத்தின் கவனமும் எங்கள் மீது விழ, பக்கத்தில் இருந்த அலுவலக உதவியாளரிடம் சொல்லி வேறு சில மேஜைகளில் தேடச்சொன்னார். ஒருசில ஊழியர்கள் என்னை நோட்டம் விட்டுக்கொண்டே தங்களது வேலையை பார்க்க துவங்கினர் (சட்ட பஞ்சாயத்து டீசர்ட் காரணமாக இருக்கலாம்). அடுத்த சில நொடிகளில் தீர்ந்துபோன விண்ணப்பம் அந்த அலுவலக உதவியாளரிடம் கிடைத்தது. விறுவிறுவென நகல் எடுக்கப்பட்டு, கேட்ட விண்ணப்பம் கைகளில் கிடைத்தது. என்ன ஒரு ஆச்சரியம்.!

விண்ணப்பம் கிடைத்ததும் நான் வேறொரு பக்கம் சென்று அதை நிரப்ப ஆரம்பித்தேன். பாவம் அந்த பெண்மணி மட்டும் தனியாக புலம்பிக் கொண்டிருந்தார். ஒரு நொடியில் ஒரு அரசு ஊழியரின் நடவடிக்கையை மாற்றிய அந்த மந்திரம் என்னவென்று தெரியுமா.. "உங்க பேர் என்னன்னு சொல்ல முடியுமா?" என்பது தான். என்னே பதட்டம்..! என்னே கோபம்..!! அன்பின் ஜேக்டோ-ஜியோ அன்பர்களே, அப்படி என்னத்தான் விசேசம் உங்கள் பெயர்களிலே?

பின்குறிப்பு: அரசு ஊழியர்கள் அனைவரும் நேம் பேட்ச் அணிந்துதான் பணிபுரிய வேண்டும் என்பது அரசாங்க விதி

- ஆனந்தம்

1 கருத்து:

  1. Tharaga mandhiram super. Just flash in my mind. Way back around 1993 the drainage connection planned in Natesa nagar, Virugambakkam, Ms Shatha Sheela Nayar, was then Chairperson Metro, came to site on our assosiation request to review the progress. A person with a diary on hand was trying to answer her question. She stoped and asked him to come forward and asked as to who he was. Prompt came reply he was Asst Engineer. Next question is where is your name badge? He was blinking. She told now you need not attend meeting, please leave and asked senior engineer, if he is seen any time by you without name badge, suspend and take disciplinary action..Where gone such a kind of officers now?

    பதிலளிநீக்கு