சரியாக 2013-ம் வருடம் மார்ச் மாதம் 21ம் தேதி அன்று, 2013-14 பட்ஜெட் அறிவிப்பில்
மாண்புமிகு நிதியமைச்சர் திரு.பன்னீர் செல்வம், “மாண்புமிகு முதல்வர் இதய தெய்வம்
புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைக்கிணங்க மத்திய அரசின் நிதியில் இருந்து ரூ.97.85
கோடி செலவில் திடக்கழிவு மற்றும் திரவக்கழிவு மேலாண்மை திட்டம் தமிழகத்தின்
அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் செயல்படுத்தப்படும்” என புதியதொரு அறிவிப்பை
வெளியிட்டார்.
அடுத்த சில நாட்களில்
அதாவது ஏப்ரல் 9, 2013 அன்று, ‘அந்த வெண்ண என்னடா சொல்றது’-ன்னு மாண்புமிகு 110
விதியின் கீழ் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அதே திட்டத்திற்கு 2013-14
பட்ஜெட் தொகையில் ரூ.150 கோடி ஒதுக்கப்படும் என தன் பங்கிற்கும் அறிவித்தார்.
பின்னர் இதற்காக 59
பக்க அரசாணை (GO 116) ஒன்று வெளியிட்டு, இதனை எவ்வாறு செயல்படுத்துவது என்று விலாவாரியாக
படம்போட்டு விளக்கி, இதனை செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு
உத்தரவிடப்பட்டது. அடுத்து சில தினங்களில் எக்ஸ்னோரா அமைப்பு மூலம் இத்திட்ட
இயக்குனர்கள் அனைவருக்கும் இதற்காக (அரசு செலவில்) சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டது.
அடுத்து 2014-15
(பிப்ரவரி 2014) பட்ஜெட் அறிவிப்பில், மாண்புமிகு நிதியமைச்சர் திரு.பன்னீர்
செல்வம், மாண்புமிகு முதல்வர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைக்கிணங்க (ஷப்பா.. இப்பவே கண்ண கட்டுதே)
‘தூய்மை கிராம திட்டத்தின்’ கீழ் கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்
செயல்படுத்த ரூ.200 கோடி ஒதுக்குவதாக அறிவித்தார்.
பின்னர் அதே வருடம்
ஆகஸ்டு மாதம் (8.8.2014), மாண்புமிகு 110 விதியின் கீழ் மாண்புமிகு தமிழக
முதல்வர், ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக மூன்று சக்கர வாகனங்கள்
வாங்க ரூ.44.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக சட்டமன்றத்தில் அறிவித்தார்.
இதற்காக ஏற்கனவே நிதியமைச்சர் அறிவித்த ரூ.200 கோடியில் இருந்து நிதி
ஒதுக்குவதாகவும் மீதமுள்ள ரூ.155.90 கோடி திடக்கழிவு மேலாண்மை பணிக்காக
செலவிடப்படும் என்றும் பின்னர் உத்தரவிடப்பட்டது.
நடுவில் திடீரென
‘தெய்வத்தை மனிதன் தண்டித்த விபரீதம்’ நடந்ததால் ஏனைய திட்டங்கள் போல இதுவும் சில
மாத காலங்கள் கிடப்பில் போடப்பட்டு, அம்மா வருகைக்காக காத்திருந்தது.
அடுத்ததாக 2015ம்
வருடம் மார்ச் மாதம், “மேற்சொன்ன அரசாணையில் சொன்னவை எல்லாம் நம்மால் செயல்படுத்த
முடியாது (இத கண்டுபிடிக்க தான் ரெண்டு வருஷம்), அதனால் ஒரு 2000 ஊராட்சிகளில் மட்டும் ரூ.5.5 லட்சம் வீதம் ரூ.110
கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தவும்” என விரிவான திட்ட
விளக்கத்துடன் திரு.ககன்தீப்சிங் பேடி ஒரு அரசாணை (GO 47) வெளியிடுகிறார். (யாருய்யா
அவரு, எனக்கே பாக்கணும் போல இருக்கேன்னு தோனுதா?) மேலும் இதற்கான தொகை,
ஏற்கனவே கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட ரூ.155.90 கோடியில் இருந்து செலவழிக்கப்படும்
என்றும் தெரிவிக்கப்படுகிறது.
‘அடப்பாவிகளா, அந்த
நிதியை அதுவரை பத்திரமாக பூட்டி தான் வச்சிருந்தீங்களா..?’-ன்னோ ‘அந்த மீதி ரூ.45.90
கோடி என்னாச்சி..?’-ன்னோ நீங்கள் கேள்வியை எழுப்பக்கூடாது என்று அப்பல்லோ மருத்துவமனை
சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பின்னர் இத்திட்டத்திற்கான
ஊராட்சிகள் கண்டறியப்பட்டு, 01.05.2015 தேதி முதல் அவற்றில் இந்த திட்டம்
செயல்படுத்த வேண்டும் எனவும் ஆணை பிறப்பிக்கப்படுகிறது. இத்திட்டம் ஆரம்பித்தார்களா
இல்லையா என்றெல்லாம் நாம் கேள்வியெழுப்ப கூடாது என்பதால், அந்தந்த மாவட்ட ஆட்சியர்
சகிதம் மாவட்ட வாரியாக ஒரு புகைப்படம் எடுத்து அரசாங்க கோப்பிலும் தினத்தந்தி
செய்தியிலும் வெளியிட்டார்கள்.
அடுத்து செப்டம்பர் 3,
2015 அன்று, மறுபடியும் ‘அந்த வெண்ண என்னடா சொல்றது’-ன்னு
மாண்புமிகு 110 விதியின் கீழ் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மேற்சொன்ன
திட்டத்தை மேலும் 7000 ஊராட்சிகளுக்கு விரிவுப்படுத்தி ரூ.300 கோடி செலவில் செயல்படுத்தப்படும்
என அறிவிக்கிறார். இதற்கான திட்ட விளக்கத்துடன் நிதி ஆதாரம் குறித்த தகவலுடன்
மேலும் ஒரு அரசாணை (GO 10) ஒன்று 2016ம் ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்படுதிறது.
இந்த அரசாணையில் கவனிக்க வேண்டிய பகுதி - ரூ.300 கோடிக்கான நிதி ஆதாரம் பற்றிய
விளக்கம் - இணைப்பு படத்தை பார்க்கவும்.
இப்போது பிப்ரவரி மாதம் மறுபடியும்
ஒரு அரசாணை (GO 22) வெளியிடப்படுகிறது (எத்தனவாட்டி..!). அதாவது
மேற்சொன்ன அரசாணைகளில் குறிப்பிட்ட ஒரு சில கட்டமைப்புகளை மாற்றி, அதற்கு பதில்
குப்பை தொட்டிகள் வைக்க தலா ரூ.25,000 வீதம் ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ.1 லட்சம்
ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்படுகிறது.
அடுத்ததாக ஜூன் 2016ல்
இதே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திட (அமோகம்..!) புதிதாக
ஒரு அரசாணை (GO 69) வெளியிடப்பட்டது. இதில் குறிப்பிட வேண்டிய மிக முக்கியமான
அம்சம், மேற்கூறிய அனைத்து திட்டங்களுக்கும் சேர்த்து இதுவரை ரூ.319.56 கோடி வரை
ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது (என்னது சிவாஜி செத்துட்டாரா.. என்ற குரல் உங்களுக்கும் ஒலிக்கிறதா..?).
பொழுதுபோகாமல்,
வண்டலூர் ஊராட்சியின் ஏதோ ஒரு கணக்கை தோண்ட போய், இவ்வளவு தெளிவான குழப்பங்கள்
இதுவரை வந்துசேர்ந்துள்ளது. தமிழக அரசின் நிர்வாகத்திறனுக்கு இவையாவும் ஒரு நல்ல உதரணம்.
அதாவது மிக எளிதாக திட்டம் போட்டு செயல்படுத்த வேண்டியதை, சுய
விளம்பரத்திற்காகவும் போதிய தொலைநோக்கு சிந்தனை இல்லாமலும் மாறி மாறி
மாற்றியமைத்ததால் கடந்த மூன்று ஆண்டுகளில் தேங்கி நிற்கிறது கிராமப்புற திடக்கழிவு
மேலாண்மை திட்டம்.
அறிவிக்கப்பட்ட தொகையை
கணக்கிட்டு பார்க்கும்போது, ரூ.1000 கோடியை தொட்டாலும் இதற்கு உண்மையில் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது ரூ.320 கோடி மட்டுமே. அதிலும் இன்றுவரை செலவிடப்பட்டது ரூ.150
கோடி அளவிற்கு மட்டுமே இருக்கக்கூடும். ஆட்சியாளர்களே இப்படி இருக்கும்போது
ஊராட்சி தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கைமட்டும் என்ன பூப்பறிக்குமா..? அவர்களும்
தம் பங்கிற்கு கைவரிசை காட்ட ‘தூய்மை கிராமம் திட்டம்’ தற்போதைய அளவில் நிம்மதியாக அசந்து தூங்கிக்கொண்டிருக்கிறது. உள்ளாட்சிகள் அமைக்கப்பட நோக்கமே இங்கு ஊசலாடிக்
கொண்டிருக்க, உள்ளாட்சி தேர்தலை எதிர்நோக்கி ஆவலுடன் நீதிமன்ற வாயிலில் காத்துக்கொண்டிருக்கிறது
தமிழகம்.
பி.கு: தற்போதைக்கு
இந்த நெடுங்கதை முடிவுக்கு வந்தாலும் அப்பல்லோவில் இருந்து மாண்புமிகு தமிழக
முதல்வர் இதயதெய்வம் புரட்சிதலைவி அம்மா அவர்கள் மீண்டெழுந்து கோட்டைக்கு திரும்பியதும்
இக்கதை தொடரும். அம்மாவுக்கு நன்றி
- ஆனந்தம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக